என் வானவில்-8

என் வானவில்-8

கொட்டும் மழை என்றும் பொருட்படுத்தாமல் இருவரும் அந்த மழையில் நின்று மித்ராவின்  வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

பிரகாஷ் சொல்லும் இடத்திற்கு செல்வது என்று முடிவு செய்த மித்ரா அது எப்படி என்று யோசித்து பயந்துபோனாள்.

மித்ரா இங்க பாரு, இங்க இருந்து நீ கிளம்பி திருச்சி ரயில்வே ஸ்டேஷன்க்கு போயிடு. அங்க என் பிரண்ட் சுஜி உனக்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருப்பாள். அவள் உன்னை எங்கு கொண்டு போய்  சேர்க்க வேண்டுமோ அங்கு உன்னை கொண்டு போய் சேர்த்துவிடுவாள் என்று கூறினான்.

ஒரு நிமிடம் யோசித்தவள் இங்கிருந்து ஸ்டேஷன்க்கு எப்படி போக வேண்டும் என்று கேட்டாள்,

பிரகாஷ் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தான். இவன் எப்படி இத்தனை வேலைகள் செய்தான் ஏன் செய்தான்? என்ற கேள்வி மித்ராவிற்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இங்கே இருந்து மெயின் ரோட்டிற்கு சென்றால் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து  நீ ஸ்டேஷன் போய்விடலாமென்று கூற,

இந்த நேரத்திற்கு ஆட்டோவா?  என்று பயத்துடன் கேட்டாள் மித்ரா,

 அவளது பயந்த பார்வையை பார்த்தபோது தன்  தோளோடு அணைத்து பயப்படாதே நான் இருக்கிறேன், என்று கூற வேண்டு போல இருந்தது பிரகாஷிற்கு. அதனை தனக்குள்ளாகவே மறைத்துக்கொண்டு வேறு வழி இல்லை மித்ரா நீ போய் தான் ஆகனும் என்று கூறினான்.

நான் அக்காவுடன் துணைக்கு போகிறேன் என்ற குரல் பின்னாலிருந்து கேட்டது.

இருவரும் யார் என்று பயந்துபோய்  திரும்பி பார்க்க அங்கு அருண் நின்றுகொண்டிருந்தான். ,

 பிரகாஷோ  மித்ராவோ சத்தியமாக அந்த நேரத்தில் அருணை அங்கு எதிர் பார்க்கவில்லை.

அவர்களின் அருகில் வந்த அருண்  பிரகாஷ் அண்ணா சொல்லுவதுதான் சரி நான் உன்னை கூட்டிக்கொண்டு போய் ஸ்டேஷனில் விட்டுவிடுகிறேன் என்று கூற,

பிரகாஷ் ஒரு நிமிடம் தயங்கினான், மித்ரா எங்கு செல்கிறாள் என்று யாருக்குமே தெரியக்கூடாது என்று நினைத்தான்.

அவன் யோசிப்பதை பார்த்த அருண் என்ன அண்ணா யோசிக்கிறீர்கள் என்று கேட்க,

இல்லை அருண் நீ சின்ன பையன்  மித்ரா எங்கு போகிறாள் என்று உனக்கு தெரிந்தால் நாளைக்கு உன்ன மிரட்டி கேட்டால் நீ சொல்லிவிடுவாய் பிறகு அவளை அங்கு அனுப்புவதில் பயனில்லாமல் போய்விடும் என்று கூற,

சரி நான் உள்ளே போகவில்லை, அவளை ஸ்டேசனில் இறக்கிவிட்டு விட்டு நான் அதே ஆட்டோவில் வந்துவிடுகிறேன் என்று கூறினான் அருண்.

பிரகாஷ் ஆட்டோக்காரரை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தான். எனவே அருண்   மித்ராவுடன் துணைக்கு போவதில் எந்த பிரச்சனயும்  இல்லை. அருண் சொன்னது போல அதே ஆட்டோவில் திரும்பிவந்துவிட்டால் மித்ரா எங்கு போகிறாள் என்ற விஷயம் அருணிற்கு தெரிய போவதில்லை என்று நினைத்தவன், அதுவும் சரி தான் என்று தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மித்ராவிடம் கொடுத்தான்.

மித்ரா அதை வாங்க தயங்க, மித்ரா காசில்லாமல் அங்கு போய் என்ன செய்ய போகிறாய்?என்று கேட்டவன் ,இதை முதலில் பிடி நீ அங்கே போ, இங்கு கொஞ்சம் எல்லாம் சரி ஆன பிறகு  நான் உன்னை ஒரு நான்கு ஐந்து நாட்கள் கழித்து வந்து பார்க்கிறேன்.

பிறகு என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்கலாம் என்று கூற, சரி என்று தலையை ஆட்டி அருணுடன் சேர்ந்து புறப்பட்டாள் மித்ரா.

 கொஞ்சம் தூரம் சென்றவள் திரும்பி பார்க்க,

பிரகாஷோ என்ன? என்று கேட்டான்.

கண்டிப்பாக நீங்க என்ன பார்க்க வருவீங்க இல்லையா? என்று கேட்க, .

இவளுடனே கிளம்பி போய்விட்டால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.

ஆனால் அவன் அவளை அனுப்பி வைப்பது இங்கிருக்கும் யாருக்கும் சிறிது கூட சந்தேகம் வராத இடம். இவனும் கூடவே கிளம்பி சென்றுவிட்டால் அவர்களுக்கு அந்த இடத்தை கண்டுபிடிப்பது பெரிய விஷயமாக இருக்காது, என்று நினைத்தவன் கண்டிப்பாக ஐந்தாறு நாட்களில் வந்துவிடுவேன். தினமும் உனக்கு நான் போனில் பேசுவேனென்று கூறி, நீ விரைவாக கிளம்பு என்று மித்ராவை அனுப்பி வைத்தான் பிரகாஷ்.

பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ அவர்களுக்காக மெயின் ரோட்டில் காத்துக்கொண்டிருந்தது.  ஆனால் இவர்கள் அழைத்து தான் அந்த ஆட்டோ  வந்தது போல ஆட்டோகாரர் காட்டிக்கொண்டார். அருண் கூறியதை போல மித்ராவை ரயில்வே ஸ்டேசனில் இறக்கிவிட்டு விட்டு அதே ஆட்டோவில் திரும்பி வந்துவிட்டான்.

வீடு வரை ஆட்டோவில் வந்தால் அந்த சத்தத்தில் யாராவது எட்டி பார்த்துவிடுவார்கள் என்று அவன் மெயின் ரோட்டிலேயே இறங்கி நடந்துவர, அதுவரை பிரகாஷ் கிணற்றடியிலேயே அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

வேகமாக வந்தவன் அக்காவை பத்திரமாக  ஸ்டேசனில் இறக்கிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அவனை பார்க்க பிரகாஷிற்கு பெருமையாக இருந்தது.

தேங்க்ஸ் டா அருண் நீ இல்லை என்றால் உன் அக்கா ஆட்டோ பிடித்து போயிருக்கமாட்டாள் என்று கூற,

என்ன அண்ணா எங்கள் அக்காவை காப்பாற்றியதற்கு நீங்க தேங்க்ஸ் சொல்கிறீர்கள்….அந்த பன்னீர்செல்வம் எல்லாம் ஒரு ஆள் என்று அவனை எல்லாம் எங்கள் அக்காவை கட்டிக்கொள்ள விடுவேனா அவள் எங்கே இருந்தாலும் சந்தோசமா இருந்தால் போதும். நீங்கள் எப்போதாவது போன் பேசும்பொழுது எனக்கும் பேச கொடுங்கள் அண்ணா, நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று அருண்  கூற,

பிரகாஷிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் மித்ராவை இங்கு விட்டுவைக்கவும் முடியாது என்ற நிலையில் கண்டிப்பாக நான் போன் பேசும்பொழுது உனக்கும் தருகிறேன் என்று கூறி அவனை வீட்டிற்குள் அனுப்பி வைத்தான்.

அதன் பின் சுவர் ஏறி குதித்து தன் வீட்டிற்குள் சென்று அவனது அறைக்கு சென்று உடை மாற்றும்பொழுது சரியாக அவனது தோழி சுஜியிடமிருந்து போன் வந்தது.

இங்கு ஸ்டேசனில் சுஜி ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய மித்ராவை சரியாக அடையாளம் கண்டுகொண்டாள்.

வேகமாக அருகில் வந்தவள் மித்ரா நான் சுஜி, என்று கூற,

மித்ரா மிரண்டு போய் அவளை பார்த்தாள்.

 நான் தான் பிரகாஷுடைய பிரண்ட், இங்க பாரு என்று பிரகாஷும் அவளும் இருக்கும் புகைப்படத்தை காட்டவும் தான் மித்ராவிற்கு சிறிது மூச்சே வந்தது.

ஒன்றும் பயப்படாதே என் கூட வா என்று அவளை கூட்டிக்கொண்டு சென்றவள் ரயில்வே ஸ்டேசனில் இருக்கும் உடை மாற்றும் அறையில் அவளுக்கு வேறு உடைகளை கொடுத்து மாற்றிக்கொள்ள சொன்னாள்.

உடை மாற்றி தலையை துவட்டிக்கொண்டு வந்தவளிடம் சூடாக பாலை கொடுக்க, எனக்கு வேண்டாம் அக்கா என்று கூறினாள் மித்ரா.

இங்க பாரு மித்ரா, வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை எதிர்த்து போராட வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டாய். எதிர்த்து போராட  உனக்கு தெம்பு வேண்டாமா? இந்த பாலை குடி எதுவுமே சாப்பிடாமல் இருப்பதனால் எதையும் சாதிக்க முடியாது என்று சுஜி கூற,

அமைதியாக பாலை வாங்கி குடித்தாள். நாம்  எங்கு அக்கா போகிறோம் என்று மித்ரா கேட்க

 பிரகாஷ் அங்கு போகும் வரை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினான். இரு அவனுக்கே போன் பண்ணிகொடுக்கிறேன் என்று  கூறினாள்.

 போன் பண்ணி விஷயத்தை கூறி மித்ராவிடம் போனை கொடுத்தாள் சுஜி.

பிரகாஷ் அவளிடம், மித்ரா நீ எங்க பாட்டி வீட்டிற்கு போகிறாய் அதன் அவர்கள் உன்னை சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்வார்கள். அங்கு நீ உன் வீடு மாதிரி இருக்கலாம். உன்னை பற்றி ஆல்ரெடி என் பாட்டியிடம் அனைத்தும் சொல்லிவிட்டேன். நீ பயப்படவேண்டாம், நீ பயப்படாமல் நிம்மதியாக அங்கு சென்று சேர் என்றான் பிரகாஷ்.

சரி என்று கேட்டுக்கொண்டவள் நீங்கள் எப்பொழுது வருவீர்கள்? என்று கேட்டாள்.

 இங்க பிரச்சனை எல்லாம் கொஞ்சம் குறையட்டும், உன் சித்தி இந்த பன்னீர்செல்வம் எல்லாரும் அடங்கின பிறகு நான் வருகிறேன். இப்போது வந்தால் அது பிரச்சனை தான் என்றான்.

 அதனை புரிந்துகொண்ட மித்ரா சரி அப்போ டெய்லி போனில் பேசுவீர்களா என்று கேட்க,

கண்டிப்பாக பேசுகிறேன் என்று கூறியவன், மித்ரா உன்னுடைய கடந்த காலத்தை இங்கையே விட்டுட்டு ஒரு புதுவாழ்க்கை ஆரம்பிக்குற எண்ணத்தோட உன்னோட பயணத்தை தொடங்கு, இந்த பயணம் முழுவதும் உன்கூடவே நான் இருப்பேன் என்று ஆழ்ந்த குரலில் கூறினான் பிரகாஷ்.,

அவன் கூறியதை கேட்டவள், இறைவா இத்தனை நாள் நான் வேண்டுனது உன்னோட காதுல கேட்டுடுச்சா, நீ தான் இவரை எனக்காக அனுப்பி வைத்தாய என்று மனதோடு கேட்டவள்,

சுஜி, ட்ரெயின்  வருகிறது என்று கூறவும் நீங்க இருக்க தைரியத்துலதான் நன் கிளம்புறேன், உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன் என்று கூறி போனை வைத்தாள் மித்ரா,

மித்ராவின் பயணம் அவளை எங்கு கொண்டுபோய் சேர்க்க போகிறது என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் “என் வானவில்”.                                                                                                    

-நறுமுகை

4

No Responses

Write a response