என் வானவில்-43

என் வானவில்-43

 தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள்.

ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு வந்த ராம்,

 பிரகாஷ் நீ இங்கிருந்ததெல்லாம் போதும் மித்ராக்கு செஞ்சதெல்லாம் போதும், முதல்ல இங்கிருந்து கிளம்பு நம்ம ஊருக்கு போகலாம் என்று சொல்ல,

பிரகாஷோ நீ சொல்லலானாலும் நான் அதை தான் செய்ய போறேண்டா ஆனால் இப்போ உடனே கிளம்பினா அம்மா அப்பாக்கு எதோ வித்தியாசமாப்படும். அவங்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம் இல்ல அப்படிங்குற மாதிரி நினைச்சிட்டு இருக்காங்க அவங்க கஷ்டப்பட வேண்டாம்.

மித்ரா  இப்படி மாறிப்போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா, நீங்கல்லாம் சொல்றப்போ கூட எதோ மித்ரா சாதாரணமா செய்றத நீயம் அபியும் பெருசா எடுத்துகிறீங்களோ என்கிற கோணத்தில் தான் நான் பார்த்தேன் என்று ராம் சொல்ல,

பிரகாஷோ, ராம் இப்போ நான் அதை பத்தி எதுவும் பேசுறதா இல்ல, என்னால நடந்த விஷயங்களை என்னனு இன்னுமே யோசிச்சு பாக்கவே முடியல மித்ரா இப்படி மாறி போனதுல எனக்கும் வருத்தம் தான், ஆனால் அவ அவளோட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா, கூட இருந்து நான் கெடுக்க விரும்பல, நான் இங்கிருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்புறேனோ அவ்வளவுக்கு அவ்வளவு மித்ராக்கு நல்லது என்று சொல்ல,

சரிடா நீ அதையே மனசுல போட்டு குழப்பிக்காத, நீ கிளம்பு நீ தான் வெளிநாடு போறியே அது கண்டிப்பா உனக்கு ஒரு மாற்றமா இருக்கும் இதெல்லாம் நீ இங்கையே மறந்துட்டு அங்க போய்  நிம்மதியா இரு. இவ்வளவு நாள் தான் நீ எந்த என்ஜாய்மெண்ட்டும் இல்லாம கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட மித்ராக்கு இதைப் பண்ணனும் அதைப் பண்ணனும் மித்ராவைப் பார்க்கணும்னு சொல்லி இங்க ஓடி வந்துட்டு இருந்த, இனிமேல் உனக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்ல பேசாம நிம்மதியா இரு என்று ராம் சொல்ல.

வெறுமனே தலையை மாட்டு அசைத்தான் பிரகாஷ்.

தான் சொல்லும்  அளவிற்கு அனைத்தையும் செய்வது நண்பனுக்கு சாத்தியம் அல்ல என்று புரிந்த ராம் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவ்விடம் விட்டு அகன்றான்.

பிரகாஷிற்கோ நடந்தவைகளை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை,  தன்னை வேறு யாராவது எதுவும் சொன்னாலே பொறுத்துக்கொள்ளாத மித்ரா இன்று தன்னைப் பார்த்து இது எங்கள் குடும்ப விஷயம் என்று சொன்ன வார்த்தை மிகவும் காயப்படுத்தியது. இனி என்ன நடந்தாலும் அந்த காயம் அறப்போறதில்லை இனி எப்பொழுதும் மித்ராவின் முன் நான் வரவேக்கூடாது என்று எண்ணிக்கொண்டவன் மித்ராவுடன் சேர்த்து பாட்டியின் உறவையும் இழந்துவிட்டோம், இனி பாட்டியைப் பார்ப்பதற்கும் இங்கு வர முடியாது. மித்ரா  ரோஹித்தை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறிவிட்டாள், தான் இங்கு வந்து சென்றுகொண்டிருந்தாள் பாட்டிக்கு மித்ராவைத் தனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை பாட்டிக்கு கொடுக்க கூடாது என்று எண்ணியவன், இனி தான் இங்கு வரவேக்கூடாது என்று முடிவு செய்தான். அந்த முடிவும் அவனுக்கு பாரமாகவே இருந்தது.

பிரகாஷ் முடிவு செய்தது போலவே அடுத்தநாள் காலை ஜெயலட்சுமி ராஜராஜனுடன் வால்பாறையில் இருந்து கிளம்ப தயாரானான். எப்பொழுதும் அவன் கிளம்புகிறேன் என்று சொன்னால் இப்போ என்ன அவசரம் ரெண்டு நாள் இருந்துட்டு போ என்று சொல்லும் தெய்வநாயகிக்கூட இந்த முறை எதுவும் சொல்லவில்லை.

தன் பேத்தி அப்படி ஒரு வார்த்தை கூறியபிறகு இவனை இங்கு இருக்க செல்வதில் நியாயம் இல்லை என்று உணர்ந்து அவர் அமைதியாகிவிட்டார்,

 அவர் மித்ராவிடம் முகம் கொடுத்து பேசாமலிருக்க,

கிளம்புவதற்கு முன் அவரை தனியாக சந்தித்த பிரகாஷ் பாட்டி உங்களுக்கு என் மேல அன்பு அதிகம்னு எனக்கு தெரியும் அதுக்காக மித்ராவை நீங்க இப்படி ஒதுக்குறது நல்லாயில்ல அவ மனசுல பட்டத்தை அவ சொன்னா நாம தான அவகிட்ட எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண கத்துக்கணும்னு சொன்னோம், எந்த முடிவையும் நீயே எடுக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தினோம், இப்போ அவளா ஒரு முடிவு எடுக்குறப்போ இது தப்பு நாங்க நினைக்குற மாதிரி தான் நீ முடிவெடுக்கணும்னு சொல்றது சரியா, அவங்க சித்தி செஞ்சதையே நாம செய்கிற மாதிரி இருக்க கூடாது. அவ என்னைக் காயப்படுத்தணும்னு அதை சொல்லியிருக்க மாட்டா, நீங்க அவ கிட்ட இப்படி முகம் கொடுத்து பேசாம இருக்காதிங்க பாட்டி. அவளுக்கு கஷ்டமாக இருக்கும் என்று சொல்ல,

பிரகாஷைப் பார்த்த தெய்வநாயகி இப்போ கூட உனக்கு அவமேல  கோவமே வரலையா பிரகாஷ்? அவ எல்லார் முன்னாடியும் உன்ன இப்படி சொன்னது உனக்கு வருத்தமாவே இல்லையா? என்று கேட்க,

கண்டிப்பா வருத்தம் இருக்கு பாட்டி ஆனால் கோவம் இல்ல, மித்ரா வளந்துட்டா அவ்வளவு தான் எனக்கு நிச்சயமா அவ மேல கோபம் கிடையாது என்று சொல்ல,

மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகி போனார் தெய்வநாயகி.

அவ உறுதியாக மித்ராவிடம் பழையபடி பேசுவார் என்று உத்தரவு வாங்கிக்கொண்டு ஊருக்கு செல்ல தயாரானான் பிரகாஷ்.

அப்போது தெய்வநாயகி, எப்போதாவது என் ஞாபகம் வந்தா எனக்கு ஒரு போன் பண்ணு என்று கூற,

ஏன் பாட்டி அப்படி சொல்றிங்க? என்று கேட்டான்.

எனக்கு தெரியும் பிரகாஷ் இதுக்கு பிறகு நீ இந்த வீட்டுக்கு வரமாட்டன்னு எனக்கு ரொம்போ நல்லா தெரியும். மித்ரா இங்க இருக்கிற வரைக்கும் உன்ன நானும் இங்க வான்னு கூப்பிட போறதில்லை. ஆனால் எனக்கு எப்போதாவது ஒரு போன் மட்டும் பண்ணு, அதை மறந்துடாத என்று சொல்ல.

பாட்டி மித்ரா வரதுக்கு முன்னாடி இருந்து எனக்கு உங்களை தெரியும், அவ எதோ சொல்லிட்டாங்கறதுக்காக உங்களை நான் பார்க்காம இருக்கமாட்டேன். கண்டிப்பா வருவேன் நீங்க அதெல்லாம் போட்டு உங்க மனசை குழப்பிக்காதீங்க, மித்ரா கூட இருக்குற டைமை அவ கூடவே ஸ்பென்ட் பண்ணுங்க அவ இன்னும் கொஞ்சம் நாள் தான் இங்க இருப்பா, அதுக்கப்புறம் காலேஜ் போக ஆரம்பிச்சுடுவா, அவ என்ன தான் முடிவை தானே எடுக்குறேன், தன்னை தன்னால் பார்த்துக்க முடியும்னு நினைச்சாலும் நீங்க இப்படி முகம் தூக்கி இருந்தால் அவளுக்கு அது ரொம்போ கஷ்டமா இருக்கும் என்று பிரகாஷ் சொல்ல

சரி பிரகாஷ், நான் பார்த்துக்கிறேன், நீ பத்திரமா போயிட்டு வா, எங்க இருந்தாலும் எனக்கு மறக்காம ஒரு போன் பண்ணு என்று சொல்ல,

கண்டிப்பா நான் டெய்லி பேசுவேன் பாட்டி என்று சொல்லிவிட்டு தன் பெற்றோருடன் வால்பாறையை விட்டு கிளம்பினான் பிரகாஷ் .

பிரகாஷ் கிளம்பி சிறிது நாட்களிலேயே மித்ரா கல்லூரி சென்று சேர்ந்தாள். அவள் கூறியது போல ஒரு வாரம் வால்பாறைக்கும் மறு வாரம் தேனிக்கும் சென்று வந்தாள்.  

முடிந்தவரை தெய்வநாயகியிடம் தினமும் பேசிவிடுவாள். அவரிடம் அவரது உடல் நலம் மற்றும் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்வாள். அவள் வரும்பொழுது மருத்துவரிடம் அழைத்துச்சென்று உடல் நிலை சரிபார்ப்பது மருந்துகள் வாங்கி தருவது, சரியாக சாப்பிடுகிறாரா? இல்லையா என்று வள்ளியிடம் கேட்டு விசாரிப்பது என்று அவள் நல்ல பேத்தியாகவே இருந்தாள். அதே போல் அவள் தாத்தாவிடமும் அத்தையிடமும் தினமும் பேசிக்கொண்டு தான் இருந்தாள்.

தேனிக்கு செல்லும்பொழுது ரோஹித்துடன் வெளியில் செல்வது நடப்பவைகளை அவனிடம் சொல்வது என்று மகிழ்ச்சியாகவே வளம் வந்துகொண்டிருந்த மித்ரா,

தன் கல்லூரி தொடங்கி ஆறு மாதத்தில் தெய்வநாயகியிடம் ஏன் பாட்டி நான் படிக்குறதே எம்.பி.ஏ தான் நான் நம்ம எஸ்டேட் கணக்கு வழக்கு எப்படி ரன் ஆகுது இதை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்க,

தெய்வநாயகியோ இதுக்கு நீ என்கிட்டே பெர்மிஷனே கேட்க வேண்டாம் மித்ரா, எப்போ நீ இதெல்லாம் செய்வன்னு தான் நான் காத்துட்டு இருக்கேன் தாராளமா நீ எப்போ எல்லாம் இங்க வரியோ அப்போ எல்லாம் நம்ம மானேஜர் கிட்ட பேசு, அவரைப் போய் பாரு உனக்கு என்ன வேணுமோ அவர்கிட்ட கேளு  அவர் ரொம்போ வருஷமா நம்ம குடும்பத்துக்காக உழைச்சுகிட்டு இருக்கார் எஸ்டேட் பத்தி அவருக்கு தெரியாத விஷயமே இல்ல என்று கூற

சரி பாட்டி என்று சொன்னவள், வார இறுதியில் வரும் நாட்கள் போக மீதி நாட்களில் போனிலும் எஸ்டேட் பற்றிய விவரங்கள் தினசரி நடவடிக்கைகள் என்று அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அனைத்தையும் மேற்பார்வையிட தொடங்கினாள்.

சில மாதங்கள் கழித்து தேனி சென்ற சமயம் இதை பற்றி தன் அத்தையிடம் விளாவாரியாக சொல்லிக்கொண்டிருந்தாள். அங்கு தான் இப்படி எல்லாம் செய்வதாகவும் பார்த்துக்கொள்வதாகவும் அது அவள் படிப்பிற்கு மிக உதவியாக இருப்பதாகவும் அவள் கூறிக்கொண்டிருக்க,

அந்தப்பக்கம் அதை கேட்டுக்கொண்டே வந்த மித்ராவின் தாத்தா ஏன் மித்தும்மா இங்கயும் அதெல்லாம் நீ செய்யலாமே, நம்ம மில்லுக்கு போ தோட்டத்துக்கு போ, கணக்கு வழக்கெல்லாம் பாரு, மில் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கோ என்று கூற,

ஹ்ம்ம் அது எப்படி தாத்தா இங்க மாமா இருக்கார் இல்ல, நான் போய் என்னன்னு பார்க்குறது என்று கூற,

உன் மாமாகிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ உனக்கு அது காலேஜ்ல சொல்லி தரத்தை வீட யூஸ்ஃபுல்லா இருக்கும் உன் மாமா மாதிரி ஒரு பிசினஸ் மேனை நான் பார்த்ததே இல்ல என்று அவளது தாத்தா கூற,

நீங்களே ஒரு வார்த்தை மாமாகிட்ட சொல்லிடுங்க தாத்தா என்று கூறினாள் மித்ரா 

மித்ரா கூறியதைப்போல மித்ராவின் தாத்தா அதை விஸ்வநாதனிடம் கூற, விஸ்வநாதனோ மகிழ்ச்சியாக அதுக்கென்ன மாமா சொல்லிகொடுத்திட்டா போச்சு என்று கூறினார்.

மித்ரா தேனி வரும் சமயங்களில் அவளை மில்லுக்கு அழைத்துச்சென்று தினசரி நடவடிக்கைகள், எப்படி தொழில் நடக்கிறது, போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க தொடங்கினார்,

தன் மேனேஜரிடம் மித்ரா வந்து எது கேட்டாலும் கொடுங்க அவ தெரிஞ்சுக்கட்டும் என்று சொல்லி வைத்திருக்க, சிறிது நாட்களிலேயே அவள் கணக்கு வழக்குகள் மற்ற விஷயங்கள் எல்லாம் கேட்டு, பார்க்க தொடங்கி அதில் இருந்து தன் மாமாவிடம் கேள்வி கேட்க தொடங்கினாள்.

விஸ்வநாதனோ இது என்னடா ஏதோ செய்ய போக வேற பூதம் கிளம்புது, என்று அவர் யோசித்து கொண்டிருக்க,

அப்போதைக்கு எதோ சொல்லி சமாளிக்க தொடங்கினார்.

ஆனால் மித்ரா அதை அவ்வளவு எளிதில் விடாமல் அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்க தொடங்கினாள்.

விஸ்வநாதனுக்கோ தான் நினைத்த அளவுக்கு மித்ரா முட்டாளும் அல்ல சாதாரணமான பெண்ணும் அல்ல என்று புரிய தொடங்கியது, எதையும் கற்பூரம் போல புரிந்து கொள்ளும் மித்ராவின் தன்மையும் என்ன தான் பல வருடம் தான் யார்? எது தன் குடும்பம்? என்று தெரியாமல் இருந்தாலும் அவளுகு இயல்பாகவே பிறப்பில் இருக்கும் பெற்றோரின் குணமும் விரைவிலேயே அவளுக்கு தொழிலின் சூட்சுமங்களை புரியவைத்தது.  அவள்  மேற்கொண்டு கேள்வி கேட்பது தனக்கு ஆபத்து என்று புரிந்த விஸ்வநாதன்  இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடி போனார்,

மித்ரா செய்யத் தொடங்கியிருக்கும் இந்த வேலையின் மூலமாக அவள் அறியப்போகும் உண்மை என்ன? விஸ்வநாதன் மித்ராவை எப்படி சமாளிப்பார்? என்று அறிய தொடர்ந்து வாசியுங்கள் என் வானவில்……….

நறுமுகை

4

No Responses

Write a response