New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-8

சஞ்சனாவின் சம்மதம் கேட்டு இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதியின் பெரியம்மா உடனடியாக கல்யாண வேலைகளை தொடங்கினார். இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருந்தது, ஆனால் இடையில் நல்ல முகூர்த்தம் இல்லாததால் மூன்று மாதங்கள் கழித்து  திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து நிச்சயம் முடித்துவிடலாம் என்று முடிவு செய்தனர். பெரியவர்கள் செய்வதை செய்யட்டும் என்று ஆதியும், சஞ்சனாவும்  போனில் பேசி காதலை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் ஆதி போன் செய்யும் போது சஞ்சனா பைனல் இயர் ப்ராஜெக்ட் வேலையாக பிசியாக இருந்தாள். அதனால் பிறகு பேசுவதாக கூறி வைத்துவிட்டாள். அதன்பிறகு அன்றும், மறுநாளும் ஆதி அவளிடம் பேசவில்லை. அவளது மெஸ்ஸேஜிற்கும் பதில் இல்லை. அவள் அவனது ஆபீஸ் எண்ணிற்கு அழைத்தும் அவனிடம் பேசமுடியவில்லை. அன்று முழுவதும் தவித்து போனவள், அடுத்த நாள் அவனை தேடி அவனது அலுவலகம் சென்றாள்.

சஞ்சனா அலுவலகம் வருவாள் என்று எதிர்பார்க்காத ஆதி அதற்கு மேல் அவளை தவிர்க்க முடியாமல் அவனது அறைக்கு அழைத்துவந்தான். அறைக்குள் சென்றும் அவன் அமைதியாக இருக்க,

ஏன் என்னோட கால்ஸ் எடுக்க மாட்டேங்குறீங்க, ஒரு மெசேஜ் கூட இல்ல என்னாச்சு தயா,

எனக்கு எதுக்கு நீ போன் பண்ணி டைம் வேஸ்ட் பண்ற அதான் உனக்கு உன்னோட ப்ராஜெக்ட் ஒர்க் இருக்குல்ல என்று கோவத்தோடு சொன்னான்.

அவன் கூறியதை கேட்டு சஞ்சனா திகைத்து போனாள் அன்று அவள் அவசரமாக போன் வைத்ததுதான் அவன் பேசாததற்கு காரணம் என்று அவள் யோசிக்கவே இல்லை. வேறு ஏதோ பிரச்சனை என்றுதான் எண்ணினாள், அவளை பொறுத்தவரை ஒர்க் இருக்குப்பா திரும்ப கூப்பிடுறன்னு சொல்லி போன் வெச்சது ரொம்போ சாதாரணமான விஷயம் அதற்கு இவன் கோவித்துக்கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

சஞ்சனா படிப்பில் கெட்டிக்காரி, படிக்கும் படிப்பை தெளிவாக பயன்படுத்தி பார்க்கும், பழகும் மனிதர்களை எடைபோட்டு விடுவாள். ஆனால் ஏன்னோ அவள் அதை ஆதியிடம் செய்யவில்லை, வாழ்க்கை போகும் போக்கில் அவனோடு வாழ்ந்து அவனை பற்றி அவன் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்ள நினைத்தாள். இன்றும் அவன் சின்ன விசயத்திற்கு கோவித்துக்கொண்டதும் தன்னிடம் நினைத்த நேரம் பேசமுடியாத கோவம் என்று நினைத்தவள் அதற்கு பின் அன்பிற்காக சிறுவயதில் இருந்து ஏங்கும் ஆதியின் மனதை அறிய தவறிவிட்டாள்.

பல வருடங்கள் கழித்து தனக்கே தனக்கு என்று வந்த சஞ்சனாவை அவன் தேவதையாக பார்த்தான் அவளை, அவளது அன்பை, காதலை, நேரத்தை யாரும் பங்குபோடுவதை அவன் விரும்பவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த கோவம். அதை அறியாத சஞ்சனா, இது காதலின் ஊடல் என்று நினைத்து அவனை சமாதானம் செய்தாள்.

என்னப்பா ஒர்க் இருக்குனு தான் சொன்ன பேசவே மாட்டேன்னு எப்ப சொன்ன, நீங்க நைட் வீட்டுக்கு வரதுக்குள்ள ஒர்க் முடிச்சுட்டா எந்த தொந்தரவும் இல்லாம பேசலானு தான் அப்படி சொன்ன, உங்களுக்கு கோவம்னா அப்பவே கேட்டிருக்கலாம் இப்படியா ரெண்டு நாள் பேசாம இருப்பீங்க,

ஒரு பெரிய ப்ராஜெக்ட் சைன் ஆனதை உன்கிட்டதான் முதல்ல சொல்லனுனு ஆசையா போன் பண்ண என்னனு கூட கேட்காம போன் வெச்சுட்ட உனக்கு உன்னோட ப்ராஜெக்ட், ஸ்டடீஸ் தான் முக்கியம் நானெல்லாம் ஒண்ணுமேயில்ல அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா இருந்துட்டேன்.

அவன் அருகில் சென்று அவன் கண்ணோடு கண் பார்த்தாள் சஞ்சனா, கோவம் இருந்தபோதும் ஆதியால் பார்வையை வேறு பக்கம் திருப்பமுடியவில்லை. ஆழமாக அவனை பார்த்தவள் தயா ஸ்டடீஸ் லைப்ல என்னோட ட்ரீம், ஆனா நீங்க என்னோட லைப், நீங்க என்ன சொல்லவரீங்கனு கேட்காம போன் வெச்சது தப்புதான், அப்பவே போன் பண்ணி என்னவிட உனக்கு அதான் முக்கியமானு கேட்டு சண்டைபோட்டிருந்த உங்களைவிட எதுவும் முக்கியம் இல்லைனு சொல்லியிருப்ப நீங்க ஏன் அதை செய்யல என்று கேட்டாள்.

அவள் நீங்க என்னோட லைப்னு சொன்னதும் ஆதியின் கோவம் தணிந்தது, எனவே கோவம் இல்லாத குரலில் யார்கிட்டயும் சண்டை போட்டு எனக்கு பழக்கம் இல்லை. இன்னும் தெளிவா சொல்லணுனா சண்டை போடுற அளவுக்கு உறவுனு யார் இருந்த என்றவனின் குரலில் இருந்த ஏக்கம் சஞ்சனாவின் மனதை தாக்கியது.

இவனை என்றும் எதற்கும் வருத்தப்பட விடக்கூடாது என்று நினைத்தவள், அவனிடம் அதான் இப்ப நான் இருக்கனே எதுனாலும் அப்பவே என்கிட்டயே கேட்டுடுங்க என்று கூறி வருங்காலத்தில் வரும் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டாள். ஆனால் அவர்களின் அன்றைய ஊடல் அத்தோடு முடிந்தது.

நிச்சயதார்த்தம் தேதி நெருங்கும் சமயத்தில் ஆதியின் ஒன்றுவிட்ட அத்தை இன்னும் சில உறவுகாரர்களை அழைத்து கொண்டு ஆதியின் பெரியம்மா வீட்டிற்கு சென்றார். வா மரகதம், என்ன எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க எதாவது முக்கியமான விஷயமா என்று ஆதியின் பெரியம்மா கேட்க,

நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா இருக்க, உறவு முறையில என்னோட பொண்ணு இருக்கும் போது, எங்க யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட கேட்காம உங்க இஷ்டத்துக்கு ஆதி கல்யாணத்தை நிச்சயம் பண்ணி இருக்கீங்க என்று கத்த தொடங்கினார் மரகதம்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த ஆதியின் பெரியப்பா, மரகதம் கூறியதை கேட்டு, நாங்க யார்கிட்டயும் கேட்கனுனு அவசியமில்லை கட்டிக்கப்போறவன் முழு சம்மதத்தோடு தான் எல்லா ஏற்பாடும் நடக்குது தேவையில்லாமல் இங்க சத்தம் போடவேண்டாம் என்று கறாராக கூறினார்,

ஏன் அண்ணா அவன்தான் ஆசைப்பட்டான்ன நீங்களாவது அத்தை பொண்ணு இருக்கு கல்யாணம் பண்ண சொந்தம் விட்டுப்போகாதுனு எடுத்து சொல்லியிருக்கலாம், அவன் சொன்னதே போதுனு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கீங்க என்று கோவமாக கேட்டார் மரகதம்.

மரகதம், இவ்வளவு வளர்ந்ததுகப்புறமும் எங்கள மதிச்சு அவன் ஆசையை எங்ககிட்ட சொன்னான் அதை நடத்திக்குடுக்குறதுதான் மரியாதை இந்த கல்யாண விசயத்துல மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என்று கூறிய ஆதியின் பெரியப்பா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

போகும் அவரை முறைத்த மரகதம் வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார். அவரோடு வந்தவர்கள் ஆதியின் பெரியம்மாவிடம் நீ ஒன்னு வருத்தப்படாத எதோ பிரச்சனைன்னு சொன்னான்னு கூட வந்தோம் இந்த விஷயம் தெரிஞ்சு இருந்த வந்தே இருக்கமாட்டோம். அவ கொஞ்சநாளைக்கு கோவமா இருப்ப அப்புறம் சரியாகிடுவா என்று ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

ஆதியின் பெரியம்மா என்னங்க இதை ஆதியிடம் சொல்லிடலாமா,

அதெல்லாம் வேண்டாம் இந்த பிரச்சனையை இங்கயே விட்டுடு, அவன் சந்தோசமாக இருக்கான், இதெல்லாம் அவன்கிடச்சொல்ல வேண்டாம். நம்மள மீறி மரகதம் எது செஞ்சுட முடியாது என்று கூறி வருங்கால பிரச்சனைக்கு அடித்தளம் இட்டார் ஆதியின் பெரியப்பா.

ஆதியின் சொந்தகாரர்கள் கூறியது போல மரகதம் அந்த விஷயத்தை எளிதில் விடுவதாக இல்லை, ஆதியின் கார்டியனாக மாறி அவனது சொத்துக்களை அடைய எண்ணினார் அது முடியவில்லை. அவ்வப்போது ஆதியிடம் பணம் வாங்குவார், அவன் அதை பெரிதாக கண்டுகொள்வது இல்லை ஆனால் அதிகளவில் பணம் கொடுக்கவும் மாட்டான். தன்னால் அடைய முடியாத சொத்தை தன் மகளை வைத்தாவது அடையவேண்டும் என்று மரகதம் நினைத்திருக்க இந்த திருமண ஏற்பாடு அவருக்கு பெரிய இடியாக இறங்கியது. ஆதியின் பெரியப்பா சொன்னதை கேட்டபின் நேர்வழி சரியாக வராது குறுக்குவழியில்தான் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணினார்.

தங்களுக்கு இப்படி ஒரு எதிரி இருப்பது தெரியாமல் அவர்கள் காதல் உலகில் ஆனந்தமாக இருந்தனர் ஆதியும், சஞ்சனாவும். மரகத்தின் திட்டம் என்ன? தடைகள் மீறி ஆதி, சஞ்சனா திருமணம் எப்படி நடக்கப்போகிறது அறிய தொடர்ந்து வாசியுங்கள் “மீண்டும் மலர்வாய்”…..

-நறுமுகை

3

No Responses

Write a response