New Tamil Novel | Meendum Malarvai

மீண்டும் மலர்வாய்-5

மறுநாள் கல்லூரிக்குச் சென்ற சஞ்சனா தன் தோழிகள் ஐவரிடமும் முன் தினம் மாலை நடந்த விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தாள்.

அவளது தோழிகளோ என்னடி சொல்ற? நிலா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஓனர் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டாங்களா? என்னால நம்பவே முடியல,

நீ அவரைப் பார்த்ததா எங்ககிட்ட சொல்லவே இல்லையே, என்று கேட்க,

சஞ்சனாவோ, ஏய் அவர் நிலா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஓனர்னு எனக்கு எப்படி தெரியும், யாரோ ஒருத்தரை கோயில்ல பார்த்தேன்னு நினச்சேன், திடீர்னு பார்த்தா ரெண்டு மாசம் கழிச்சு வந்து பொண்ணு கேக்குறாங்க, என்று கூறினாள்.

டைரக்டாவே வந்து ப்ரொபோஸ் பண்ணினாராடி என்று அவளது தோழி மீனா ஆச்சர்யமாக சஞ்சனாவிடம் கேட்க,

டைரக்டா ப்ரொபோஸ் பண்ணினார்னு சொல்ல முடியாது ஆனால் கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் சொன்னாரு என்று சொல்ல,

நீ என்ன முடிவு பண்ணியிருக்க? என்று அவளது மற்றொரு தோழி கேட்க,

எனக்கு தெரியலடி, என்ன சொல்றதுன்னு தெரியல, திடீர்னு வந்து இப்படி கேட்கவும் ஒண்ணுமே புரியல, அண்ணனும் சரி பொறுமையா விசாரிச்சிட்டு சொல்றோம்னு தான் சொன்னார். இவ்வளோ பணக்கார இடத்துல இருந்து வந்து கேக்குறப்போ கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்,

அதுவும் சரி தான், அவங்களுக்கு என்ன, அவங்க ஸ்டேட்டசுக்கு கிடைக்காத பொண்ணா? எதுக்கு நம்மகிட்ட வரணும் எதாவது பிரச்சனையோ என்னவோ? என்று சொல்ல,

மீனாவோ எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி. என் அண்ணனோட ஃபிரண்ட் அவர் கம்பெனில தான் ஒர்க் பன்றாரு, அவர் அவங்க ஓனரைப் பத்தி பெருமையா பேசுவார், இந்த சின்ன வயசுலயே நிறைய சாதிச்சிருக்கார், ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது, அம்மா அப்பா இல்லைனாகூட ரொம்போ ஒழுக்கமா வளர்ந்திருக்கார்னு சொல்லி எப்பவுமே புகழ்ந்து பேசுவார் என்று கூற,

சரி தான் இருந்தாலும் அவங்க ஏன் நம்ம சஞ்சனாவை பொண்ணு கேட்டு வரனும்?

அதான் அவரே காரணம் சொல்லியிருக்காரே, கோயில்ல பார்த்தேன் பிடிச்சிருக்குன்னு, ஒன்னும் அவர் சும்மா பொண்ணு கேட்டு வரலையே ரெண்டு மாசமா இவளை தரவா ஸ்டடி பண்ணிட்டு தான் பொண்ணு கேட்டு வந்திருக்காரு, என்று கூற

கரெக்ட்டுடி, அவருக்கு மட்டும் நம்ம பத்தி நல்லா தெரியுது அவரைப் பத்தி எதுவுமே தெரியாம நாம எப்படி கல்யாணத்துக்கு ஓகே சொல்றது என்று கேட்டாள் சஞ்சனா.

ஆமாடி ஏன் எதுவும் தெரியாம சரின்னு சொல்லணும் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே சரின்னு சொல்லு என்றாள் அவளது தோழி நந்தினி,

எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா அது எப்படி?

என்ன சஞ்சு பேசுற? நாமெல்லாம் என்ன படிப்பு படிக்கிறோம்? நாம சைக்காலஜி இல்ல படிக்கிறோம்,

ஆமா….

அப்போ உன் ஆளை வரச்சொல்லி நாமெல்லாம் ஒரு இன்டெர்வியூ வச்சிடுவோம், நமக்கும் படிச்ச சைக்காலஜி எந்த அளவுக்கு ஒர்க் ஆகுதுன்னு தெரியுமில்ல, என்று கேட்க,

ஏய் என் ஆளு அது இதுன்னு எல்லாம் சொல்ற அளவுக்கு வச்சிக்காத நான் இன்னும் அந்த அளவுக்கு கமிட் ஆகல, என்று சஞ்சனா சொல்ல,

சரி ஆளுன்னு சொல்லல, உன்ன வந்து பொண்ணு கேட்டுட்டு போனார் இல்ல மிஸ்டர் ஆதித்யா, அவரை நாமெல்லாம் ஒரு இன்டெர்வியூ  பண்ணிடுவோம்,

இன்டெர்வியூவா என்னடி சொல்ற?

ஏய் சைக்காலஜி படிக்கறது எதுக்கு மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான, இவர் மனசுல என்ன இருக்குனு நாம தெரிஞ்சுக்குவோம். அதுக்கப்புறம் உனக்கு பிடிச்சா ஓகே சொல்லு இல்லனா விட்டுடு, நாங்க யாராவது பிக்கப் பண்ணிக்கிறோம் என்று சொல்ல,

ஏய் அவர் என்ன ஷேர் ஆட்டோவா நான் வேண்டாம்னா நீ பிக்கப் பண்றதுக்கு என்று சஞ்சனா கேட்க,

அதெல்லாம் கிடையாது நீ வேண்டான்னு சொல்லிட்டா அவர் ஃப்ரீயாதான இருப்பாரு என்று கூற,

மீனாவோ, சஞ்சு யோசிச்சு இவளுக்கு இன்ட்ரோ பண்ணு, இவ வேற எதுக்கோ பிளான் பண்ற மாதிரி இருக்கு.

பிளான் பண்ணினா பண்ணிட்டு போறாடி, அவரை இன்டெர்வியூ பண்ணலாம்னு சொல்றிங்களா? ஆனா கூப்பிட்டா அவர் வருவாரா என்று சஞ்சனா கேள்வியாக கேட்க,

அவருதான் நீ என்னைப் பத்தி நல்லா விசாரிச்சிட்டு அதுக்கப்புறம் சம்மதம் சொல்லுன்னு சொன்னார் இல்ல, யார்கிட்டையோ விசாரிக்கிறதுக்கு நாங்க உங்ககிட்டையே விசாரிக்கிறோம்னு நீ சொல்லிடு, என்று தோழிகள் ஐடியா கொடுத்தார்கள்.

இது கூட நல்லா இருக்கே ஆனா அவரை எப்படி நாம வர சொல்றது? என்கிட்டே அவர் போன் நம்பர் இல்லையே என்று சஞ்சனா சொல்ல,

என்னடி இவ ஊரறிஞ்ச கம்பெனி ஆன்லைன்ல போட்டா போன் நம்பர் வரப்போகுது, போன் பண்ணிக்கேளு என்று தோழிகள் உற்சாகப்படுத்த சஞ்சனா ஆதித்யனின் கம்பெனிக்கு போன் செய்தாள்.

அந்தப்பக்கம் போனை எடுத்த ரிஷப்சனிஸ்ட், ஹலோ நிலா குருப்ஸ் ஆஃப் கம்பெனிஸ் என்று கூற,

உங்க எம்.டி கிட்ட பேசணும் என்றாள் சஞ்சனா.

ரிஷப்சனிஸ்ட்டோ அப்பாயின்மென்ட் இருக்கா மேடம் என்று கேட்டார்.

அப்பாயின்மென்ட் இல்ல போன் காலுக்கு கூட அப்பாயின்மென்ட் வாங்கணுமா? என்று சஞ்சனா கேட்க,

ஆமாம் மேடம் நான் ஒரு நம்பர் தரேன் அந்த நம்பருக்கு கால் பண்ணி அப்பாயின்மென்ட் புக் பண்ணிக்கோங்க என்று கூறினாள்.

சரி என்று சஞ்சனா போனை வைக்கப்போகும் கடைசி நிமிஷத்தில் அந்த ரிஷப்சனிஸ்ட் உங்க பேரு மேடம் என்று கேட்க,

சஞ்சனா என்றாள்.

ஒரு நிமிஷம் இருங்க மேடம் நீங்க கால் பண்ணினா சார் உடனே லைன் குடுக்க சொன்னாரு, நீங்க ஃபரஸ்ட்டே உங்க நேம் சொல்லிருக்கலாம் இல்ல, என்று படபடப்போடு ஆதித்யனுக்கு லைன் கொடுத்தாள்.

சஞ்சனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் கால் செய்வோம் என்று முன்னரே தெரிந்து அவன் ஆபீசில் சொல்லி வைத்திருந்தது உண்மையிலேயே வியப்பாக தான் இருந்தது. அவள் அதை யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆதித்யன் லைனில் வந்தான்.

சொல்லு சஞ்சனா இவ்வளோ சீக்கிரத்துல உன்கிட்ட இருந்து கால் வரும்னு நான் எதிர்பார்க்கல, என்று கூறினான்.

சாரி, ஆபீஸ் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்று சஞ்சனா கேட்க,

அதெல்லாம் ஒண்ணுமில்ல என்ன விஷயம் சொல்லு என்றான்,

இல்ல என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உங்களை மீட் பண்ணனும்னு சொன்னாங்க அதான் உங்களுக்கு டைம் இருக்குமான்னு கேக்கலாம்னு கால் பண்ணினேன்.

உன் ஃபிரண்ட்ஸ் என்னை மீட் பண்ணனும்னு சொன்னாங்களா என்ன விஷயமா,

நீங்க தான உங்களைப் பத்தி விசாரிச்சுட்டு முடிவு எடுக்க சொன்னிங்க வெளியில எங்கயோ, யார்கிட்டையோ விசாரிக்கறதுக்கு உங்ககிட்டையே கேட்டிடலாம்னு என் ஃபிரண்ட்ஸ் உங்களை மீட் பண்ணலாம்னு நினைக்குறாங்க.

உடனே அவன் முகத்தில் தோன்றிய முறுவலோடு அதாவது உன் ஃபிரண்ட்ஸ் என்னை இன்டெர்வியூ பண்ண போறாங்க நீங்க படிக்கறதை என் மேல இம்பிளிமெண்ட் பண்ணி பார்க்கலாம்னு பார்க்குறீங்க என்று அவன் கேட்க

தாங்கள் பேசியதை இப்படி ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டானே என்று இருந்தது அவளுக்கு, இருந்தாலும் அதை ஏற்க மனமில்லாமல் அப்படி எல்லாம் இல்ல, சும்மா பேசி தெரிஞ்சுக்கலாமேன்னு என்று கூற,

சரி எப்போ மீட் பண்ணலாம் என்று அவளிடமே திருப்பி கேட்டான்.

உங்களுக்கு எப்போ பிரீன்னு சொல்லுங்க அப்போ மீட் பண்ணலாம் என்று கூற.

சரி, இந்த சண்டே லஞ்ச்க்கு மீட் பண்ணலாம், நானே ஒரு ரெஸ்டாரெண்ட்ல டேபிள் புக் பண்ணிட்டு உனக்கு டீடைல்ஸ் சொல்றேன். உன் நம்பர் என்கிட்டே இருக்கு அதுக்கு என் பெர்சனல் நம்பரை மெசேஜ் பண்றேன், இனிமேல் ஏதாவது வேணும்னா என்கிட்டே பேசணும்னா என் பெர்சனல் நம்பருக்கு கால் பண்ணு என்று கூறினான். 

சரி என்றவள், தன்னுடன் எத்தனை தோழிகள் வருவார்கள் என்ற விஷயத்தை அவனிடம் கூறிவிட்டு போனை வைத்தாள்.

போனை வைத்தவள் தன் தோழிகளிடம் ஏய், ஆள் சரியான கேடி டி, நாம என்ன எல்லாம் பிளான் பண்ணினோமோ அதை ஒரே வார்த்தையில் கண்டுபிடிச்சிட்டார் என்று சொல்ல,

அப்படி இல்லாம இவ்வளவு பெரிய பிஸினஸை நடத்த முடியுமா? சரி விடு அப்படி என்ன தான் அவர் டேலண்ட்டா இருந்தாலும் நாம ஒரு கை பார்த்துடுவோம், என்று கூறி தோழிகள் சந்தோஷ கூச்சலிட்டனர்.

அந்த வாரம் ஞாயிறு அன்று தான் தோழிகளுடன் வெளியே செல்வதாக கூறி கிளம்பி சென்றாள் சஞ்சனா.

பொதுவாக அவள் இதுபோல சில நேரங்களில் போவதுண்டு என்பதால் கிருஷ்ணவேணியும் தோண்டி துருவி என்னவென்று கேள்வி கேட்கவில்லை,

ஏற்கனவே டேபிள் புக் செய்த விவரங்களை ஆதித்யன் சஞ்சனாவிற்கு கூறி இருந்ததால் அவளும் அவளது தோழிகளும் அங்கு சென்று அமர்ந்து ஆதித்யனுக்காக காத்திருந்தனர்.

ஆதித்யனும் அவர்களை அதிக நேரம் காத்திருக்கவிடாமல் பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.

இந்த சந்திப்பு சஞ்சனா, ஆதித்யன் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது அறிய தொடர்ந்து வாசியுங்கள் மீண்டும் மலர்வாய்……

-நறுமுகை

1

No Responses

Write a response