தேர்வு முடிவுகள் ……..

தேர்வு முடிவுகள் ……..

என் அன்பு சகாக்களுக்கு,
சில முக்கிய வேலைகள் முடிக்கவேண்டியது இருந்தது அதனால உங்ககூட தொடர்ந்து பேசமுடியாம போச்சு. எல்லாரும் நலமா இருப்பீங்கனு நம்புற. தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்னும் பரபரப்பு குறையாம இருக்கு, பலரின் கருத்துக்கள், கோவங்கள், ஏமாற்றங்கள், வாக்குறுதிகள் இப்படி இந்த தேர்தல் பற்றி பேச பல விஷயங்கள் இருக்கு. ஆனால் நம்ப இன்னைக்கு அதை பற்றி பேசப்போறதில்லை, நாம் அந்த தேர்தல் முடிவுகளுக்கும் முன்னாடி வந்த தேர்வு முடிவுகளை பற்றி தான் இங்க பேசப்போறோம். இந்த தேர்வு முடிவுகள் எப்பவும் எனக்கு பயத்தை கொடுக்கும், நான் படிச்சுட்டு இருக்கவரைக்கும் முடிவுகள் எப்படி வருமோங்குற பயம் , ஆனா இப்ப தேர்வுமுடிவுகளுக்கு அப்புறம் வரும் தற்கொலை செய்திகள் பற்றிய பயம். நம் குழந்தைகள் நமக்கு பயந்து தற்கொலை முடிவுக்கு போறாங்க, இதுக்கு முழு பொறுப்பும் நாம் தான். மதிப்பெண் முக்கியமானதுதான் ஆனா அதுவே வாழ்க்கை கிடையாது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். சுவரை இடிச்சுட்டு சித்திரம் ஒழுங்கா வரலைனா எப்படி. பிள்ளைகளோட எல்லா நிலையிலும் கூட இருக்க வேண்டியது நம்மோட கடமை.நான் நிறைய பெற்றோர் பாத்து இருக்க மதிப்பெண் குறைவா எடுத்துட்டா நீ என் பிள்ளையே இல்ல அப்படி சொல்லி திட்டுற பெற்றோர்கள் நம்மில் அதிகம்.நீங்க அப்படி சொல்ற நிமிசத்துல இருந்து உங்க பிள்ளைகளுக்கு உங்க மேல இருந்த நம்பிக்கை விரிசல் விட தொடங்கிடும். அந்த விரிசல் இரண்டு விதமான விளைவை ஏற்படுத்தும், ஒன்று உங்க மீது அச்சத்தை ஏற்படுத்தும் அது பின்னாளில் தற்கொலை போன்ற எண்ணங்களுக்கு வித்திடும், இரண்டு உங்க மீது உள்ள பாசம், அன்பு எல்லாத்தையும் மாற்றி அங்கு வெறுப்பை விதைத்துவிடும், இந்த பிள்ளைகள் வெகு விரைவில் உங்கள் கையை மீறி சென்றுவிடுவார்கள். ரொம்போ குறுகிய சதவீத பிள்ளைகள் மட்டுமே நல்லா படிச்சு அப்பா கிட்ட நல்ல பெரு வாங்கிடனு அப்படினு நினைப்பாங்க. நமக்கு 30 வயசுல அறிமுகமான மனஅழுத்தம் நம்ப குழந்தைகளுக்கு 10 வயசுல அறிமுகம் ஆகுது.நாம் நிறுத்தி நிதானமா அனுபவிச்ச வாழ்க்கை அவங்களுக்கு எப்பவும் ஓட்டப்பந்தயம் மாதிரி பரபரப்ப இருக்கு. உங்க நிலையில் இருந்து பாக்காம அவங்க நிலையில் இருந்து அவங்க பிரச்சனைகளை பாருங்க. எத்தனையோ படிக்காத மேதைகளை பார்த்த நம் நாட்டில் மதிப்பெண் குறைவா எடுத்ததுக்காக தற்கொலைகள் நடப்பது வருத்தத்துக்குரியது. உங்க பிள்ளைகளோடு திறமை என்ன, ஆர்வம் என்ன எல்லா தெரிஞ்சு அவங்ககிட்ட கலந்து ஆலோசிச்சு அவர்களுக்கான பாதையை தேர்ந்தெடுங்கள்.மதிப்பெண் வெறும் பயணசீட்டு அது எதிர்காலத்துக்கான கதவை திறக்கும் சாவி அவ்வளவுதான், ஆனா உங்க பிள்ளைகளின் திறமை தான் அவர்களுடன் பயணப்படும். வேறும் புத்தக அறிவை கொடுக்காமல் உலக அறிவை வாழ்க்கை பற்றிய புரிதலை உங்க பிள்ளைகளுக்கு கொடுங்கள். எந்த நிலையையும் சமாளிக்கும் சமயோசித அறிவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். படிப்பும் மதிப்பெண்ணும் முக்கியம் அவை வாழ்க்கை புத்தகத்தின் ஒரு அத்தியாயம் அவையே வாழ்க்கை அல்ல. இதனை முதலில் நீங்கள் உணரவேண்டும், பின் உங்கள் பிள்ளைகளுக்கு புரியவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. தொடர்ந்து பேசலாம்……..

என்றும் அன்புடன்
சக தோழி

2

No Responses

Write a response